உதயமாகுமா இவர்களது வாழ்வு?

கடந்த யுத்தத்தின் பின் உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு மக்கள் பல வருடங்களின் பின் தம் சொந்த நிலங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆந்த வகையில் 16வருடங்களின் பின் J/89 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த உதய புரத்தில் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை மீளக்குடியேற்றுவதில் அரசுக்கு இருக்கும் வேகம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் இல்லை. கடற்றொழிலை பிரதான தொழிலாகக் கொண்ட இம் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். குடி தண்ணீர் வசதி இல்லாத நிலையில் “பவுசர்” தண்ணீரையே எதிர்பார்த்து இருக்கின்றனர்.சில வேளைகளில் பவுசர் வராத சந்தர்ப்பங்களும் நிலவுவதாக கூறினர்.



 இப்பிரதேசத்தில் 203 துண்டு காணிகள் காணப்படுகின்றன. இங்கு 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக் கிராமத்தினுள் நுழைவதற்கு ஒற்றையடிப்பாதையே காணப்படுகின்றது. இரு மருங்கிலும் பற்றைகள் சூழந்துள்ள நிலையில்  பாதை முழுவதும் மணல் பரந்ததாக உளளது. இதனூடாக போக்குவரத்துச் செய்வதில் அப்பிரதேச மக்கள் பெரும் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதைக் காணமுடிகின்றது. மீளக்குடியேறிய தமக்கு 12தகரங்கள் மாத்திரமே தரப்பட்டதாகவும் யோகேஸ்வரி என்பவர் கூறினார். அது தவிர தமக்கு எவ்வித உதவியும் செய்து தரப்படவில்லை எனவும் கூறினார். மலசலகூட வசதியற்ற நிலையில் தாம்  பற்றைகளை மறைவுகளை நாடிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினர்.
 “தேர்தல் காலம் என்றதும் வந்து வாக்கறுதி தருவார்கள் , எம்மால் இயன்ற உதவிகளை செய்து தருவோம் என்று சொல்வார்கள்.பின்னர் தேர்தல் முடிவடைந்ததும் இந்தப் பக்கமே வரமாட்டினம்.” ஏன்று அக்கிராம மக்கள் அங்கலாய்த்தனர். கண்தெரியாத தன் 21 வயது மகனுடனும் தம் 4 பெண் பிள்ளைகளுடனும் உதயபுரத்தில் மீளக்குடியேறியுள்ள பரமேஸ்வரி என்பவர் கூறுகையில் “இங்கு வைத்தியசாலை வசதி இல்லை.இந்த நிலையிர் என்னுடைய முத்த பிள்ளை கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவரையும் இங்கு கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றேன்.நள்ளிரவில் ஏதேனும் ஆபத்தென்றால் வைத்தியசாலைக்குச் செல்வதே பெரும் சிரமமாக உள்ளது எனக் கூறிக் கண்கலங்கினர்
மீளக் குடியேறிய மக்களுக்கான மீளமைப்பு நிதியாக 2500 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இங்கு வசிக்கும் மக்களுக்கான அந்நிதி வழங்கப்படவில்லை. வீதி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபடும் குடும்பத்தினருக்கு மட்டுமே இந்நிதி வழங்கப்படும் எனக் கூறியதாகவும் வேதனைப்பட்டனர்.
இவ்வாறு எந்தவித அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தம் வாழ்வைத் தொடரும் உதயபுரம் மக்களது வாழ்வில் உதயத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்;கை எடுத்து அவர்களது வாழ்விலும் உதயத்தை ஏற்படுத்த வேண்டும்.  

0 comments :: உதயமாகுமா இவர்களது வாழ்வு?

Post a Comment